« கவிமொழிகள் - நவீன்பிரகாஷ், விஷி, செந்தில் | HomePage | கதைமொழி - ஞானம் பிறந்த தீபாவளி! - SP.VR.சுப்பையா »

March 20, 2007

கதைமொழி - மனக்கூத்து - தமிழ்நதி


ருணாகரன் அருந்ததியை வந்தடைந்தபோது வளர்ப்பு மறுக்கப்பட்டு தெருவோரம் விடப்பட்ட நாய்க்குட்டியின் மனோநிலையைக் கொண்டிருந்தான். வாழ்வு அவனைக் கைவிட்டு விட்டதென்று ஓயாமல் சொல்லிக் கொண்டே யிருந்தான். நீ இப்படித் தன்னிரக்கத் தோடிருப்பது உன்னை அழித்துவிடும் என்று அவள் சொன்ன வார்த்தைகளை, காற்றெடுத்துப் போய் கடலுக்கப்பால் எறிந்துவிட்டதைப் போலிருந்தன அவனது நடவடிக்கைகள்.

இரண்டு அறைகளைக் கொண்ட அந்த வீட்டில் அவள் தனியேதான் இருந்தாள். வீட்டுப் பத்திரம் அவளுடைய பெயரில் இருந்ததால், அவள் புருசனாக வரித்துக்கொண்டவனால் அந்த வீட்டிலிருந்து அவளைத் துரத்தமுடியாமற் போனது. அவளுடைய நகைகள்,புடவைகள்,பாத்திரங்கள் என ஒவ்வொன்றாக முறைவைத்து அடகுகடையிலும் விற்பனையிலும் மூழ்கடித்து சாராயமாக்கித் தீர்த்தபிறகு வீட்டையும் விற்றுவிட தலைகீழாக நின்றுபார்த்தான். அவள் சம்மதிக்கவில்லை. அவளையும் விற்றுக் குடித்துவிடும் எண்ணத்தோடிருந்த ஒரு நாளில் அவனை வெளியில் தள்ளிக் கதவடைத்தாள். துடைப்பம் என்பது பெருக்குவதற்கானது மட்டுமல்ல என்ற புதிய விடயத்தை அந்த நாள் அவளுக்குக் கற்றுக்கொடுத்தது. புருசனை அடிக்கக்கூடாதென்று அக்கம்பக்கத்தவர் எவரும் அவள் காதுபட பேசாததில் நிம்மதிதான். எப்போதாவது குடித்துவிட்டு வந்து அவள் கற்பைச் சந்தேகித்துக் காறியுமிழ்ந்துவிட்டுப் போவதன்றி, புருசன் என்பவனின் நிழல் கூட அங்கில்லாது போயிற்று.

அவள் கணக்கியல் படித்திருந்தாள். ஆனால் அதற்குச் சம்பந்தமில்லாமல் திருமணமாகும்வரை ஒரு நிறுவனத்தில் தட்டச்சுபவளாகப் பணிபுரிந்துகொண்டிருந்தாள். அந்தப் படிப்பும் அனுபவமும் புருசனும் நகைகளும் போனபிற்பாடு சாப்பாட்டுக்கு வழிசெய்தன. எங்கெங்கோ சுற்றியலைந்து ஈற்றில் ஒரு மொத்த விற்பனவு நிலையத்தில் கணக்குப் பார்க்கும் வேலையில் சேர்ந்தபோது இப்படியெல்லாம் நேருமென்று அவள் எண்ணியிருக்கவில்லை.

அன்று முதலாளி வரும்வரை வாசலில் சோர்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தவனை இடையிடையே கவனித்தபடி கணக்கெழுதி முடித்தாள். முன்னரெப்போதும் அந்த முகத்தை அங்கு கண்டதாக நினைவில்லை. அவன் அந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தாத தோற்றத்தில் இருந்தான். சுருண்ட முடி நெற்றியில் அலைந்துகொண்டிருந்தது. அடர்நீல நிறத்திலான சட்டை அவனுடைய நிறத்தைத் தூக்கலாகக் காட்டியது. உதடுகள் மெல்லிய கீற்றென இருந்தன. அப்படி உதடுள்ளவர்களை நம்பக்கூடாதென அவள் எங்கோ வாசித்திருந்தாள். விழிகள் நிதானமில்லாது அலைந்துகொண்டிருந்தன. இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு கண்களைச் சந்தித்ததும் களவுசெய்து பிடிபட்டுவிட்ட பள்ளிச் சிறுவனைப்போல சடாரெனத் திரும்பிக்கொண்டான்.

“யாருடி அது…?”கூட வேலைபார்க்கும் சுந்தரியிடம் கேட்டாள்.
“அவன்தான் மொதலாளியோட பையன் கருணாகரன். படிச்சுட்டு ஏதோ பத்திரிகைல வேல பாக்கிறானாம். கதையெல்லாம் எழுதறதாச் சொல்றாங்க. அப்பங்காரனைப் போல ஆளுங்கள விரட்டத் தெரியாது. வருவான் போவான் அவ்ளவுதான்”
“கதையெல்லாம் எழுதுவானா… பாக்கத் தெரியுது”என்றாள்.
“ஏண்டி அவனைப் பத்தி நீ விசாரிக்கிற…அழகா இருக்கான்னுதான?”
“இல்லடி அந்தாளப் பாத்தாப் பாவமாயிருக்கு… எதையோ பறிகொடுத்தாப்ல… சிரிச்சுப் பேசற ஆம்பிளைகளப் பாத்தா இப்பல்லாம் கோவமாயிருக்கு”புருசன் நினைப்பில் சொன்னாள் அருந்ததி.

அவளோடு கருணாகரன் எப்படி நெருக்கமானான் என்பதை நினைத்துப் பார்த்தால் அவளுக்கே அதிசயமாய்த்தானிருக்கிறது. அவனது மௌனமும், அவன்மீது காரணமறியாது படிந்துவிட்ட பரிதாபமும்தான் அவளை ஈர்த்திருக்க வேண்டும். இரவு ஏழு மணியானதும் அவளது வீட்டிற்கு வந்துவிடுவான். பத்து மணிவரையிலும் கூட அவர்களது பேச்சு நீள்வதுண்டு.

“என்னடி லவ்வா…?”சுந்தரி கண்சிமிட்டிச் சிரித்தாள்.
“ஐயே…!லவ்வா… இவ்வளவு ஆனதுக்கப்புறமா… ஒரு வாட்டி சு10டு பட்டது பத்தாதா…அவனுக்கும் எனக்கும் ஏழு வயசு வித்யாசம்…சும்மா அவங்கவங்க பழைய கதை பேசிட்டிருப்போம்… எதோ பெரியார் அது இதும்பான். அவெம் பேசுறதுல பாதி புரியறதில்ல”
“அவ்வ்வளவு நேரம்மா…பாத்து அருந்ததி… இதெல்லாம் எங்கயாவது கொண்டு விடப்போது”
“நாய்க்கு எப்ப பாரு எதயோ திங்கற நெனைப்புத்தாம்பாங்க”

சுந்தரி மட்டுமென்றில்லை. ஊர் பேசியது. கூட வேலை செய்யும் மற்றவர்கள் பேசினார்கள். அவன் அவளையொரு எதிர்ப்பாலினமாகக் கருதாமலிருந்தான். அவள் அழகாயிருப்பதாக ஒரு தடவைகூட அவன் சொன்னதில்லை. தான் காதலித்த பெண்ணைப் பற்றி, அந்தப் பெண் காதலித்த ஆணைப் பற்றி, காசு காசு என்று அலையும் அப்பனைப் பற்றி,தன்னை நினைத்து வயிறெரிந்து அழும் தாயைப் பற்றி, தாயும் அண்ணனின் மனைவியும் சேர்ந்து வீட்டைக் குருசேத்திரமாக்குவது பற்றி, பொறுப்பற்ற சகோதரனைப் பற்றி மட்டுமே ஆரம்பத்தில் பேசினான். அவள் அவனது கவலைகளைக் கொட்டும் பள்ளமாகிவிட்டிருந்தாள். ஏழு மணியாகியதும் அவனது மோட்டார் சைக்கிள் முற்றத்தில் இல்லாவிட்டால் வீடு இருளடர்ந்து கிடப்பதுபோல தோன்றத்தொடங்கிவிட்டது.

அண்மைய நாட்களில் அவனுடைய நடவடிக்கைகளில் ஒரு மாறுதலை அவதானித்திருந்தாள். அவளைப் பற்றித் தான் அதிக அக்கறையோடிருப்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டுமென்பது போல நடந்துகொண்டான். தன்னைத் தவிர்த்து அவள் வேறு யாருடனும் நெருக்கமாகிவிடக்கூடாதே என்பதுபோல, அவளது ஒவ்வொரு நடவடிக்கையையும் கேட்டுத் தெரிந்துகொண்டான். அவள் நேரத்திற்குச் சாப்பிடாததைப் பற்றி அக்கறைப்பட்டான். அதேபோல அவளும் தன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று குழந்தைத்தனமாக ஆசைப்பட்டான். காலையில் வேலைக்குப் போவதன் முன் ஒரு தடவை வந்து பார்த்துவிட்டு நேரமானால் அழைத்துக்கொண்டு போய் விட வேறு செய்தான். ஒரு நாளில் மூன்று தடவையாவது தொலைபேசியில் அழைத்தான். இரவில் ‘இன்னும் நீ தூங்கவில்லையா…?’என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான்.

“ஏன் இப்பிடி நடந்துக்கறே…?”பொறுக்கமாட்டாமல் ஒருநாள் கேட்டுவிட்டாள்.
“எப்பிடி…?”
“அவங்கல்லாம் சொல்றதை நெசமாக்கறது மாதிரி”
“நீயும் நானும் ஒழுங்காத்தான இருக்கோம்”
“அத அவங்களயெல்லாம் ஒவ்வொருத்தரா கூப்ட்டு கூப்ட்டு சொல்லிட்டிருக்கமுடியுமா?”
“ஒம் பேர் கெட்டுப் போய்டும்னுதான இப்டிப் பேசற”
“இனும கெட என்ன இருக்கு”அவள் தணிந்த குரலில் சொன்னாள்.

அன்று மாலைவரை அவன் அழைக்காதது அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஏழு மணி அவனைக் காணாது கடந்தது. அருந்ததிக்கு அவன் வராதது ஏதோ ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது. ஆனாலும், ஏதோவொரு எதிர்பார்ப்பில் நெடுநேரமாக வாசல் இருளை வெறித்துப்பார்த்துக்கொண்டு திண்ணையில் இருந்தாள். கதவைப் பூட்டப்போக இருளுக்குள் ஓருருவம் நின்றிருப்பது தெரிந்தது. ஒருகணம் யாரோ என்று நினைத்துக் கத்தப்போனாள். ‘நான்தான்’என்ற அவனது குரல் கேட்டதும் கோபமாக இருந்தது.

“எதுக்கு பேய் மாதிரி இதுல நின்னுட்டிருக்க… திக்குன்னு ஆகிப் போச்சு ஒரு நிமிசம்”
“எட்டு மணிலேர்ந்து இங்ஙனதான் நின்னுட்டிருக்கேன்.”
“ஒனக்கென்ன பைத்தியமா…?”
“நீ என்னயத் தேடுறியான்னு இங்க நின்னு பாத்துட்டிருந்தேன்”
“ஒன்னோட பழகுறதுக்கே பயமா இருக்கு… நீயேன் இப்டி விசித்திரமான நடந்துக்கறே…”
“எனக்கு ஒங்கூடவே இருக்கணும்”
தலையைக் குனிந்தபடி சொன்னான்.
“அப்டின்னா… நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாங்கிறியா…? இல்ல என்னய வைப்பாட்டியா வைச்சிருக்கப் போறேன்னு சொல்றியா…?”
“ரெண்டுமில்ல. எனக்கு ஒங்கூட ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கணும் அவ்ளவுதான்”

அவளுக்கு எழுந்து உள்ளே போய்விடலாமா என்றிருந்தது. ஆழமறியாமல் ஒரு பைத்தியத்திடம் மாட்டிவிட்டோமோ என்றுகூடத் தோன்றியது.

“எனக்கு ஊர்ல பொண்ணு பாக்கறாங்க”என்றான்.
“கட்டிக்கயேன்… எனக்கும் நிம்மதியா இருக்கும்”
“எனக்கெதுக்கு கல்யாணமெல்லாம்… வாழ்நாள் பூரா ஒம் பக்கத்துலயே இருந்துட்டு செத்துப் போயிடறனே…”
அவள் எழுந்து நின்றாள்.

“எனக்கு கேக்க ஒருத்தரும் இல்லேன்னுதான இப்டி வந்திருந்து அழிச்சாட்டியம் பண்றே… எம் மேல ஆசைப்படுறியான்னா இல்லன்னு சொல்றே… ஆனா பக்கத்துலயே இருக்கணுங்றே… கண்டதையும் படிச்சுட்டு பைத்தியக்காரத்தனமா ஒளர்ற மாதிரியிருக்கு”

“சத்தியமா அருந்ததி அதான் உண்மை… எனக்கு ஒன் கூடப் படுத்துக்கணும்னெல்லாம் ஆசை கெடயாது. ஒம் மடியில படுத்துக்கணும். நீ எனக்குத் தாயா இருந்தாப் போதும்…! சிநேகிதியா இரு போதும். நான் ஒனக்குக் காவலா இருக்கேன்”

“நாய் மாதிரியா…?”
அவன் சடாரென்று எழுந்து மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கிப் போனான்.
பின்னால் போய் அழைக்கலாமா என்று தோன்றியது. பிறகு, போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு ஓடிப்போய்விட்ட புருசன்காரனை நினைக்க ஆத்திரமாக இருந்தது. ஒற்றைப்பெண்ணாகப் பெற்றுப்போட்டுவிட்டு யாரோ அவசரப்பட்டு அழைத்ததுபோல செத்துப்போய்விட்ட தாய்தந்தையை, தனிமையை, இல்லாமையை, அந்த வேலையை விடமுடியாதிருப்பதை எல்லாவற்றையும் நினைக்க தலையை விரித்துப் போட்டுக்கொண்டு இருந்து அழலாம் போலிருந்தது.

மறுமுறை அவனைப் பார்த்தபோது கடையின் முன்னால் நின்று யாருடனோ தர்க்கப்பட்டுக்கொண்டிருந்தான். புதியவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. இவளைக் கண்டதும் அவன் ‘நாம அப்புறமாப் பேசலாம்’என்று சொல்லிவிட்டுப் போனான். போகும்போது அருந்ததியை ‘நான் ஒன்னைப் பாக்கறேன் பார்’என்பதுபோல மேலிருந்து கீழ் பார்த்துவிட்டுப் போனான்.

“எங்க வந்தே…?”
“நான் ஒன்னயப் பாக்க வரல. அப்பாவைப் பாத்துப் பணம் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்”
அவன் முகத்தைத் திருப்பி எங்கோ பார்த்துக்கொண்டு பேசினாலும் சாராய நெடியடித்தது.
“குடிச்சிருக்கியா…?”
“ஏன் குடிச்சாத் தப்பா…?”
“குடியை வுட்டுட்டேன்னு அன்னிக்குச் சொன்னே..”
“சரி இனுமக் குடிக்கல”
அவன் கீழ்ப்படிவுள்ள குழந்தையைப் போல சொன்னான். அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“சரி நா போறேன்”
“நேரம் கிடைக்கறப்ப நீ எனக்கு போன் பண்றியா…?”
“எதுக்கு…?”
“பேசணும்”

கடைக்குள் போனதும்தான் முதலாளி உள்ளே இருந்துகொண்டு அவனுக்கு இல்லை என்று சொல்லியனுப்பியிருந்தது தெரியவந்தது.

“என்னவாம் அந்த நாயி…?”
மகனைப் பற்றி அவளிடம் பேசும் முதல் வார்த்தை இவ்விதம் அமைந்துவிட்டதே என்பது குறித்து உள்ளுக்குள் வருத்தம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இருவரைப் பற்றியும் கடையில் பேசுவது அவர் காதுவரை நிச்சயம் போயிருக்கும். அது கண்களில் தெரிந்தது. அவரிடம் சட்டெனப் பொய் சொல்ல வரவில்லை.

“போன் பண்ணச் சொன்னார்”
“நீ அவங்கிட்ட ஒண்ணும் வச்சுக்காத… வம்பு பிடிச்ச பய”தந்தையே தன் மகனைப் பற்றி இப்படிச் சொல்வது ஒருமாதிரியாகத்தானிருந்தது.
“ஏன் இப்டி…?”மெதுவாகக் கேட்டாள்.

“ஊர்ல ஒரு பொண்ண லவ் பண்ணான். அவ வேற யாரோடவோ ஓடிப் போய்ட்டாளாம். அதுலேர்ந்து ஒரே குடி. கொடல் வெந்து போச்சு. இங்க கொணாந்து கடையைப் பாத்துக்கடான்னு வுட்டா வாற வருமானம் எல்லாத்தையும் எடுத்து சாராயக்கடையில கொட்டினான். அப்றம்தான் பாத்துட்டுத் தொரத்தி வுட்டுட்டேன். அவென் அம்மா ராத்திரி பகலா அவெனை நெனைச்சு ஒரே அழுகைதான். தெனமும் வந்து காசு கேப்பான். இப்ப ஒன்னோட பழக ஆரம்மிச்சாப்றந்தான் குடி கொஞ்சம் கொறஞ்சிருக்கு”
அவள் கண்களைத் தாழ்த்திக்கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். முதலாளிக்குத் தன்மீது கோபமில்லை அபிமானந்தான் என்பதறிந்து கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

“உனக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை…?”குறுஞ்செய்தி அவனிடமிருந்துதான்.
“நீ என்னுடைய மனதில் முள்ளாய் இருக்கிறாய்” அரை மணி நேரம் கழித்து மற்றொரு செய்தி.
“உன் நினைவைக் குடித்து அழிக்கிறேன்”மேலுமொன்று.
“மன்னித்துக்கொள் நான் உன்னைத் தொந்தரவு செய்வதற்கு”

தொடர்ந்து வந்த செய்திகள் அவன் குடித்துக்கொண்டிருக்கிறான் என்பதைக் கூறின. அவள் கைத்தொலைபேசியை அணைத்துவைத்தாள். அவன் மீண்டும் மீண்டும் அவளோடு தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருப்பான் என்பதை அவள் அறிவாள். ஆனாலும் தனக்கு அவன் மீது கோபம் வராதது ஆச்சரியமாக இருந்தது.

“இன்னிக்குப் பாத்தா ஒரேயடியா சொல்லிடணும்… இந்தக் கூத்தெல்லாம் வேணாம். ஊரைப் பாக்கப் போய்ச் சேருன்னு..”நினைத்துக்கொண்டாள். அவனோடு பேசாமலிருப்பது சிரமந்தான். என்றாலும் நாட்களானால் அவனை மறந்துவிடலாம் என்பது அவளுக்குத் தெரியும்.

அவன் நன்றாகத் தூங்கி எழுந்துவிட்டு வந்திருக்க வேண்டும். முகம் தெளிந்திருந்தது. விட்டத்தை வெறித்துக்கொண்டு,தெருவைப் பார்த்துக்கொண்டு,நகத்தைச் சுரண்டியபடி பொழுது வெறுமனே கழிந்துகொண்டிருந்தது. அவன் அவளது விழிகளைப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவள்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

“இந்த நாடகமெல்லாம் எதுக்கு…?”
“ஒருத்தர் மேல அன்பாயிருக்கறதுக்குப் பேர் நாடகமா…?”
“நா யாரோ ஒருத்தி. நாளைக்கு ஒனக்குக் கல்யாணமானாத் தூக்கிப் போட்டுட்டுப் போய்ட்டே இருக்கப்போற…இடைநடுவில ஒனக்குப் பொழுதுபோகணும்ங்றதுக்காக என்னயப் பயன்படுத்திக்காத… நா ஏற்கெனவே நொந்துபோயிருக்கறவ”

அவன் தலையைக் குனிந்துகொண்டான். புறங்கையால் கண்களைத் தேய்த்துக்கொண்டான். நிமிர்ந்தபோது இமையோரம் சிவந்திருந்தது.

“என்னமோ தெரில… எனக்கு ஒன்னயப் புடிச்சிருக்கு. மத்தப் பொண்ணுங்க மாதிரி எல்லாருக்கும் நெளிஞ்சு கொழஞ்சுக்கிட்டு இல்லாம தனிச்சு வாழ்க்கைய சவாலா எடுத்துக்கிட்டிருக்கற ஒன்னோட துணிச்சல் புடிச்சிருக்கு. ஒன்னோட கையப் புடிச்சிக்கிட்டு வாழ்க்கை முழுக்க ஒம்பின்னாடி வந்தா பயமில்லாம இருக்கலாம்னு தோணுது. உண்மையச் சொன்னா என்னைவிட வயசு கொறச்சலானவளா இருந்திருந்தா ஒன்னய கல்யாணம் பண்ணிக்கறதைப் பத்தி யோசிச்சுப் பாத்திருப்பேன்னு இன்னிக்குத் தோணுச்சு. ஆனா இதுக்குப் பேர் காதல் இல்ல. ஒம்மேல எனக்கிருக்கிறது விட்டுவிலக முடியாத மரியாதை மட்டுந்தான். என்னய போடா மயிரேன்னுட்டு ஓடிப்போனவ மேலதான் இன்னும் கிறுக்குப் புடிச்சுக் கெடக்கு…”

அவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது. ஆனால் அவன் வார்த்தைகளில் இருந்த நியாயத்தையும் உண்மையையும் மறுக்க முடியவில்லை.

“இனும என்னயப் பாக்க வராத. அமைதியா தன்பாட்டில ஓடிக்கிட்டிருந்த ஆத்துல எறங்கி அடியில கெடக்கற வண்டலையெல்லாம் கொழப்பி வுட்டுட்டுப் போற பாவத்தைப் பண்ணாத. தனிச்சுப் போயிட்டேன்தான். ஆனா சாக விரும்பலை. தயவுசெஞ்சு நீ போயிடு”

அவள் முழங்காலில் முகம் புதைத்து அழுதாள். எழுந்து அவளைத் தொட்டுத் தேற்ற வேண்டும் போலிருந்தது. எப்போதுமில்லாதபடி அவளை அணைத்துக்கொள்ளத் தோன்றியது. அவளருகில் அமர்ந்து கூந்தலில் முகம் புதைத்துக்கொண்டாலென்ன என்று நினைத்தான். அவள் அழுவதை சில நிமிடங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் படியிறங்கிப் போனான்.

அவன் போனபிறகு அவள் வெகுநேரமாக இருளிலேயே உட்கார்ந்திருந்தாள்.

16:40 Posted in சிறுகதை | Permalink | Comments (0) | Trackbacks (0) | Email this

Trackbacks

The URL to Trackback this post is: http://valaimozhi.blogspirit.com/trackback/1225887

Post a comment