October 10, 2007
கதைமொழி
கதைமொழி
17:50 Posted in சிறுகதை | Permalink | Comments (0) | Trackbacks (0) | Email this
March 20, 2007
கதைமொழி - ஞானம் பிறந்த தீபாவளி! - SP.VR.சுப்பையா
ஞானம் பிறந்த தீபாவளி!
SP.VR.சுப்பையா, கோயமுத்தூர்
தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன. கோயம்புத்தூரிலுள்ள அத்தனை வீடுகளுக்கும் கதவைத் தட்டிக்கொண்டு தீபாவளிப் பரபரப்பு நுழைந்து விட்டது. ஆனால் சாரதா வீட்டிற்கு மட்டும் இன்னும் அது வரவில்லை.கன்னத்தில் கையையும், முகத்தில் உம்மையும் வைத்துக்கொண்டு வீட்டு வாசற்படி அருகே உட்கார்ந்திருந்தாள் சாரதா.
மோட்டார் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு உள்ளே வந்த மணி - முழுப்பெயர் சுப்பிரமணியன் - கேட்டான்
"என்னடா செல்லம்! எந்தக் கப்பல் கவிழ்ந்து விட்டது.? கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கே?"
அவள் அவன் தொனிக்குச் சற்றும் குறையாமல் பதில் சொன்னாள்,
"மைலாப்பூர் மீனி ஆச்சிவீட்டுக் கப்பல் கவிழ்ந்து விட்டது!"
"மீனி ஆச்சி வீட்டுக் கப்பலா? அது கவிழவே கவிழாதே! எனக்குத் தெரியாமல் எப்படிக் கவிழ்ந்தது? இரு போனில் கேட்டு விடுகிறேன்...." என்று சட்டைப்பையில் இருந்து அவன் தன் செல் போனை எடுக்க, சாரதா அவன் கையில் இருந்து அதைப் பறித்துக் கொண்டு விட்டாள்.
கப்பல் என்று சாரதா ஜாடையாகச் சொன்னது அவளுடைய மாமியார் மீனி ஆச்சியைத்தான்.
எப்படிக் கவிழ்ந்ததாம்?
சாரதா உள்ளே வந்து சொன்னபிறகுதான் அவனுக்கு விளங்கியது.
தன் மகன் மணி, மருமகள் சாரதா, பேத்தி மீனா ஆகியோருக்கு வழக்கம்போல தீபாவளிக்கு அணிந்து கொள்ள உடைகள் அனுப்பியிருந்தார் மீனி ஆச்சி.. அதில்தான் சாரதாவிற்குக் குறை. சாரதாவிற்குப் பிறகு வந்த மற்ற இரு மருமகள்களுக்கும் பட்டுப் புடவை கலகலப்பான கலரில் வாங்கிக் கொடுத்துவிட்டு சாரதாவிற்கு மட்டும் எம்ப்ராய்டரி காட்டன் சேலை என்றால் கோபம் வராதா? இருப்பவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டமா?
மணி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் தாயாரைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் அப்படி யெல்லாம் செய்யக்கூடியவர்கள் அல்ல!
ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கும். அதை எப்படி போனில் கேட்க முடியும்? கேட்டாலும் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்காதா?
பிறகு பார்த்துக்கொள்வோம் என்று விட்டதோடு, அன்று
மாலையே கணபதி சில்க்ஸிற்குச் சென்று சாரதாவிற்குப் பிடித்த மாம்பழக்கலரில் பட்டுப் புடவை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துக் குறைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டான்.
அப்போதும் சாரதா விடவில்லை,"நான்காயிரம் ரூபாய் இருக்கும்போல - உங்களுக்கு ஏது பணம் - கிரிடிட் கார்டில் வாங்கினீர்களா?" என்று கேட்டுக் குடைந்தபோது சிரித்து மழுப்பினானே தவிர ஸ்திரமாக ஒன்றும் பதில் சொல்லவில்லை.
*
அவன் தாயார் அவனுக்குச் செய்துள்ளவற்றையெல்லாம் பட்டியல் போட்டால் பத்துப் பக்கம் எழுதலாம். அவ்வளவு செய்திருக்கின்றார்கள்
சென்னை வேண்டாம், கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில்தான் பொறியியல் படிப்பேன் என்று இங்கே வந்து படித்த போது, படித்து முடித்தவுடன் சென்னை குரோம்பேட்டையில் இருந்த தங்களுடைய தொழிற்சாலைக்கு வந்துவிடு என்று அவனுடைய தந்தையார் கெஞ்சிய நிலையில், முடியாது என்று சொல்லி விட்டுப் பிடிவாதம் பிடித்து தன் நண்பர் ஒருவனுடன் சேர்ந்து கோவை பங்கு மார்க்கெட்டில் பணம் கொடுத்து உறுப்பினர் அட்டை வாங்கிக் கொண்டு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டபோது, பிறகு முன்றே வருடங்களில் ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் திருவாளர் சீதாராம கேசரி அவர்கள், தேவகெளடா அரசிற்குத் தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள - மொத்தப் பங்கு வணிகமும் ஊத்திக் கொள்ள, இவன் 30 லட்ச ரூபாய் நஷ்டத்தோடு தெருவிற்கு வந்தபோது என்று எல்லா சந்தர்ப்பங்களிலும் அவனுக்குக் கை கொடுத்துக் கறையேற்றி விட்டவர் அவனுடைய தாயார் மீனி ஆச்சிதான் என்றால் அது மிகையல்ல!
அதையெல்லாம் விட முக்கியம், பங்கு வர்த்தகத்தில் நுழைந்த வருடம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாரதாவைப் பார்த்து விட்டுப் பின் அவளைப் பற்றிய முழுத் தகவல்களோடு தன் தாயாருக்கு அவளையே தனக்கு மணம் முடித்து வைக்கும்படி மனுப்போட்ட போது ஒரு பேச்சுச் பேசாமல், தோது, பெரிய நகைகள் என்று எதையுமே சட்டை செய்யாமல் அவனுக்கு, அவளையே திருமணம் செய்தும் வைத்தார்கள். இவன் அவளுடைய அழகிற்காகவும் படிப்பிற்காகவும் ஆசைப்பட்டு அவளை மணந்து கொண்டான்.
சாரதா வரும்போது கழுத்திரு உட்பட வெறும் 40 பவுன் நகைகளோடுதான் வந்தாள். அந்த நகைகளும் ரகசியமாக மணி கொடுத்துவிட்டிருந்த பணத்தால்தான் சாத்தியமாயிற்று. அவளுடைய தந்தையாரின் நிலைமை அப்படி.
சாரதாவைத் திருமணம் செய்துகொண்ட இரண்டாவது வருடம்வரை ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாகத்தான் போனது. ஆனால் பங்கு மார்க்கெட்டால் ஏற்பட்ட பெரிய நஷ்டத்திற்குப் பிறகு, மீனி ஆச்சி எல்லாவற்றையும் வந்திருந்து ஒழுங்கு பண்ணியவரகள், போதும் கோயமுத்தூர் வாசம், வா ஊரைக்காலி செய்து கொண்டு என்ற போது, மணி மறுத்து விட்டு கோவையில் இருக்கும் பெரிய நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்து விட்டான்.
அவனுக்கு மனதிற்குள் உறுத்தல் அவ்வளவு பெரியதொகைக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டுக் கூனிக் குறுகிச் சென்னை சென்று பெரிய குடும்பத்தாருடன் ஐக்கியமாவதில் அவனுக்கு விருப்பம் இல்லை. அப்படியே தனக்குப் பிடித்த கோவையிலேயே தங்கி விட்டான். வாங்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கும், சாப்பாடு, இன்னபிற செலவு களுக்கும் போதுமானதாக இருந்தது. ஒன்பது வருடங்கள் நிமிடமாய் ஓடி விட்டது. அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்து மகிழ்வித்துக் கொண்டி ருக்கிறது. அவளுக்கும் இப்போது பத்து வயதாகிறது.
*
தீபாவளியன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்த சாரதா, முதல் காரியமாகக் குளித்து முடித்து வந்து விளக்கேற்றியவள், அன்று தாங்கள் சாமி கும்பிட்டுவிட்டு அணிந்து கொள்ள வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டு வந்து தடுக்கின் மீது அடுக்கத் துவங்கினாள்.
அப்போதுதான் அது நிகழ்ந்தது.
மடிப்புக் குலைந்திருந்த எம்ப்ராய்டரி காட்டன் சேலை முழுதாகப் பிரித்தவுடன் உள்ளேயிருந்து வெள்ளைக் கவர் ஒன்று கீழே விழுந்தது.
எடுத்துப் பிரித்தவள் திகைத்துப் போய் விட்டாள். கவருக்குள்ளே ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு ஒன்றும், மற்றும் ரூபாய் இருபத்தையாயிரத்திற்கு ஒன்றுமாய் இரண்டு வரைவோலைகள் இருந்ததோடு, உடன் அவள் பெயருக்கு அவள் மாமியார் ரத்தினச் சுருக்கமாக எழுதிய கடிதமும் இருந்த்து.
பரபரப்புடன் கடிதத்தை எடுத்துப் படித்தாள்
அதில் எழுதியிருந்தது இதுதான்:
"அன்புள்ள சாரதாவிற்கு அத்தை எழுதிக் கொண்டது. உங்கள் மூவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இத்துடன் ரூபாய் இருபத்தைந்தாயிரத்திற்கு டிராப்ட் ஒன்று அனுப்பியுள்ளேன். உனக்குப் பிரியமான கலரில் குறைந்த விலையில் ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொள்ளவும். மிச்சப் பணத்தை வைப்பு நிதியாக உன் மகள் பெயரில் போட்டு வைக்கவும் இப்போதிருந்து சேர்த்தால்தான் அவளுக்கு உரிய பருவத்தில் அவளுக்குச் சிரமமின்றித் திருமணம் செய்ய முடியும். அதேபோல ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு இன்னும் ஒரு டிராப்ட் உள்ளது. அதை மாற்றி மணியின் பெயரில் உள்ள கிரிடிட் கார்டுக் கடனை முழுவதுமாகப் பைசல் பண்ணி விட்டுக் கார்டை முடக்கி விடவும் அல்லது நீ வாங்கி வைத்துக் கொள். கிரிடிட் கார்டிற்குக் கொள்ளை வட்டி. கையில் வைத்திருந்தால் உபயோகப் படுத்தச் சொல்லும். இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்"
கடிதத்தைப் படித்தவுடன் சாரதா மனதால் நொருங்கிப் போனாள்.
அவர்களுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு. அவர்களைப்போய் தப்பாய் நினைத்தோமே!
அப்படியே சாய்ந்து உட்கார்ந்தவள் தன்னை மறந்து விட்டாள்.
எவ்வளவு நேரம் அதே கிறக்கத்தில் உட்கார்ந்திருந்தாளோ அவளுக்கே தெரியாது. அவள் கணவன் மணி படுக்கை அறையிலிருந்து குரல் கொடுத்தபோதுதான் சுய நினைவிற்கு வந்தாள்.
*
காலை மணி ஏழு. புது உடைகளுக்கு அவற்றின் நுனியில் மஞ்சள் வைத்துக்கொண்டிருந்த மணி, தான் வாங்கிக் கொடுத்திருந்த பட்டுப் புடவையை அங்கே காணாது, சாரதாவை அழைத்துக் கேட்டான்.
அவள் சொன்னாள். "அத்தை அனுப்பிய சேலைதான் ராசி. அதைத்தான் கட்டிக்கொள்ளப்போகிறேன். நீங்கள் அதற்கு மட்டும் மஞ்சள் வையுங்கள் போதும்!"
"என்ன ஆயிற்று உனக்கு? ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறாய்?"
அதற்குமேல் அவள் ஒன்றும் பேசாமல், மெளனமாக தன் மாமியார் எழுதியிருந்த கடிதத்தை, வரைவோலை இனைப்புக்களுடன்
அவன் கையில் கொடுத்தாள்.
முழுதும் படித்தவன், திரும்பி அவளைப் பார்த்துக் குறுகுறுப்பாகப் புன்னகை செய்தான்
அவனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்ட சாரதா மன நெகிழ்ச்சியுடன் சொன்னாள்,"என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாமல் உங்கள் தாயாரைக் குறை சொன்னது தவறுதான்!"
அவன் விடவில்லை,"சரி அதை அப்புறம் பேசிக் கொள்வோம், நான் உனக்கு வாங்கிக் கொடுத்த புடவையை எடுத்துக் கொண்டு வா"
அவள் கண்களில் நிர் பனிக்க மெதுவாக, ஆனால் ஆணித் தரமாகப் பேசினாள்
"இல்லை அதை நம் மகளுக்காக வைத்துவிட்டேன். அவள் சடங்காகும்போது அவள் கட்டும் முதல் புடவை அவளுடைய அப்பா வாங்கிக் கொடுத்த புடவையாக இருக்கட்டும். இனிமேல் நான் புதுப் பட்டுப் புடவைக்கே ஆசைப்படப் போவதில்லை. இருக்கிற புடவைகள் போதும். சிக்கனமாக இருந்து பணம் சேர்த்துப் பெண்ணைப் படிக்க வைத்து உரிய காலத்தில் அவளுக்கு மணம் செய்து வைத்தால்தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும். பெண்களுக்கு உடம்பு பட்டாகவும், உடம்பிற்கு மேல் பட்டாகவும் இருப்பதில் அர்த்தமில்லை. மனசுதான் பட்டாக இருக்கவேண்டும் - உங்கள் அம்மாவைப்போல!"
சாரதாவின் வார்த்தைகளைக் கேட்ட மணி செயலற்றுப்போய் நின்றுவிட்டான்!
ஒரு மின்னல் வெட்டியதைப் போல தன் மகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அவன் மனதிலும் தொன்றியது
ஆமாம். இருவருக்கும் ஞானம் பிறந்தது. இந்த தீபாவளி சாதா ரண தீபாவளியல்ல. இருவருக்கும் ஞானத்தை கொடுத்த தீபாவளி!
*
17:55 Posted in சிறுகதை | Permalink | Comments (1) | Trackbacks (0) | Email this
கதைமொழி - மனக்கூத்து - தமிழ்நதி
கருணாகரன் அருந்ததியை வந்தடைந்தபோது வளர்ப்பு மறுக்கப்பட்டு தெருவோரம் விடப்பட்ட நாய்க்குட்டியின் மனோநிலையைக் கொண்டிருந்தான். வாழ்வு அவனைக் கைவிட்டு விட்டதென்று ஓயாமல் சொல்லிக் கொண்டே யிருந்தான். நீ இப்படித் தன்னிரக்கத் தோடிருப்பது உன்னை அழித்துவிடும் என்று அவள் சொன்ன வார்த்தைகளை, காற்றெடுத்துப் போய் கடலுக்கப்பால் எறிந்துவிட்டதைப் போலிருந்தன அவனது நடவடிக்கைகள்.இரண்டு அறைகளைக் கொண்ட அந்த வீட்டில் அவள் தனியேதான் இருந்தாள். வீட்டுப் பத்திரம் அவளுடைய பெயரில் இருந்ததால், அவள் புருசனாக வரித்துக்கொண்டவனால் அந்த வீட்டிலிருந்து அவளைத் துரத்தமுடியாமற் போனது. அவளுடைய நகைகள்,புடவைகள்,பாத்திரங்கள் என ஒவ்வொன்றாக முறைவைத்து அடகுகடையிலும் விற்பனையிலும் மூழ்கடித்து சாராயமாக்கித் தீர்த்தபிறகு வீட்டையும் விற்றுவிட தலைகீழாக நின்றுபார்த்தான். அவள் சம்மதிக்கவில்லை. அவளையும் விற்றுக் குடித்துவிடும் எண்ணத்தோடிருந்த ஒரு நாளில் அவனை வெளியில் தள்ளிக் கதவடைத்தாள். துடைப்பம் என்பது பெருக்குவதற்கானது மட்டுமல்ல என்ற புதிய விடயத்தை அந்த நாள் அவளுக்குக் கற்றுக்கொடுத்தது. புருசனை அடிக்கக்கூடாதென்று அக்கம்பக்கத்தவர் எவரும் அவள் காதுபட பேசாததில் நிம்மதிதான். எப்போதாவது குடித்துவிட்டு வந்து அவள் கற்பைச் சந்தேகித்துக் காறியுமிழ்ந்துவிட்டுப் போவதன்றி, புருசன் என்பவனின் நிழல் கூட அங்கில்லாது போயிற்று.
அவள் கணக்கியல் படித்திருந்தாள். ஆனால் அதற்குச் சம்பந்தமில்லாமல் திருமணமாகும்வரை ஒரு நிறுவனத்தில் தட்டச்சுபவளாகப் பணிபுரிந்துகொண்டிருந்தாள். அந்தப் படிப்பும் அனுபவமும் புருசனும் நகைகளும் போனபிற்பாடு சாப்பாட்டுக்கு வழிசெய்தன. எங்கெங்கோ சுற்றியலைந்து ஈற்றில் ஒரு மொத்த விற்பனவு நிலையத்தில் கணக்குப் பார்க்கும் வேலையில் சேர்ந்தபோது இப்படியெல்லாம் நேருமென்று அவள் எண்ணியிருக்கவில்லை.
அன்று முதலாளி வரும்வரை வாசலில் சோர்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தவனை இடையிடையே கவனித்தபடி கணக்கெழுதி முடித்தாள். முன்னரெப்போதும் அந்த முகத்தை அங்கு கண்டதாக நினைவில்லை. அவன் அந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தாத தோற்றத்தில் இருந்தான். சுருண்ட முடி நெற்றியில் அலைந்துகொண்டிருந்தது. அடர்நீல நிறத்திலான சட்டை அவனுடைய நிறத்தைத் தூக்கலாகக் காட்டியது. உதடுகள் மெல்லிய கீற்றென இருந்தன. அப்படி உதடுள்ளவர்களை நம்பக்கூடாதென அவள் எங்கோ வாசித்திருந்தாள். விழிகள் நிதானமில்லாது அலைந்துகொண்டிருந்தன. இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு கண்களைச் சந்தித்ததும் களவுசெய்து பிடிபட்டுவிட்ட பள்ளிச் சிறுவனைப்போல சடாரெனத் திரும்பிக்கொண்டான்.
“யாருடி அது…?”கூட வேலைபார்க்கும் சுந்தரியிடம் கேட்டாள்.
“அவன்தான் மொதலாளியோட பையன் கருணாகரன். படிச்சுட்டு ஏதோ பத்திரிகைல வேல பாக்கிறானாம். கதையெல்லாம் எழுதறதாச் சொல்றாங்க. அப்பங்காரனைப் போல ஆளுங்கள விரட்டத் தெரியாது. வருவான் போவான் அவ்ளவுதான்”
“கதையெல்லாம் எழுதுவானா… பாக்கத் தெரியுது”என்றாள்.
“ஏண்டி அவனைப் பத்தி நீ விசாரிக்கிற…அழகா இருக்கான்னுதான?”
“இல்லடி அந்தாளப் பாத்தாப் பாவமாயிருக்கு… எதையோ பறிகொடுத்தாப்ல… சிரிச்சுப் பேசற ஆம்பிளைகளப் பாத்தா இப்பல்லாம் கோவமாயிருக்கு”புருசன் நினைப்பில் சொன்னாள் அருந்ததி.
அவளோடு கருணாகரன் எப்படி நெருக்கமானான் என்பதை நினைத்துப் பார்த்தால் அவளுக்கே அதிசயமாய்த்தானிருக்கிறது. அவனது மௌனமும், அவன்மீது காரணமறியாது படிந்துவிட்ட பரிதாபமும்தான் அவளை ஈர்த்திருக்க வேண்டும். இரவு ஏழு மணியானதும் அவளது வீட்டிற்கு வந்துவிடுவான். பத்து மணிவரையிலும் கூட அவர்களது பேச்சு நீள்வதுண்டு.
“என்னடி லவ்வா…?”சுந்தரி கண்சிமிட்டிச் சிரித்தாள்.
“ஐயே…!லவ்வா… இவ்வளவு ஆனதுக்கப்புறமா… ஒரு வாட்டி சு10டு பட்டது பத்தாதா…அவனுக்கும் எனக்கும் ஏழு வயசு வித்யாசம்…சும்மா அவங்கவங்க பழைய கதை பேசிட்டிருப்போம்… எதோ பெரியார் அது இதும்பான். அவெம் பேசுறதுல பாதி புரியறதில்ல”
“அவ்வ்வளவு நேரம்மா…பாத்து அருந்ததி… இதெல்லாம் எங்கயாவது கொண்டு விடப்போது”
“நாய்க்கு எப்ப பாரு எதயோ திங்கற நெனைப்புத்தாம்பாங்க”
சுந்தரி மட்டுமென்றில்லை. ஊர் பேசியது. கூட வேலை செய்யும் மற்றவர்கள் பேசினார்கள். அவன் அவளையொரு எதிர்ப்பாலினமாகக் கருதாமலிருந்தான். அவள் அழகாயிருப்பதாக ஒரு தடவைகூட அவன் சொன்னதில்லை. தான் காதலித்த பெண்ணைப் பற்றி, அந்தப் பெண் காதலித்த ஆணைப் பற்றி, காசு காசு என்று அலையும் அப்பனைப் பற்றி,தன்னை நினைத்து வயிறெரிந்து அழும் தாயைப் பற்றி, தாயும் அண்ணனின் மனைவியும் சேர்ந்து வீட்டைக் குருசேத்திரமாக்குவது பற்றி, பொறுப்பற்ற சகோதரனைப் பற்றி மட்டுமே ஆரம்பத்தில் பேசினான். அவள் அவனது கவலைகளைக் கொட்டும் பள்ளமாகிவிட்டிருந்தாள். ஏழு மணியாகியதும் அவனது மோட்டார் சைக்கிள் முற்றத்தில் இல்லாவிட்டால் வீடு இருளடர்ந்து கிடப்பதுபோல தோன்றத்தொடங்கிவிட்டது.
அண்மைய நாட்களில் அவனுடைய நடவடிக்கைகளில் ஒரு மாறுதலை அவதானித்திருந்தாள். அவளைப் பற்றித் தான் அதிக அக்கறையோடிருப்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டுமென்பது போல நடந்துகொண்டான். தன்னைத் தவிர்த்து அவள் வேறு யாருடனும் நெருக்கமாகிவிடக்கூடாதே என்பதுபோல, அவளது ஒவ்வொரு நடவடிக்கையையும் கேட்டுத் தெரிந்துகொண்டான். அவள் நேரத்திற்குச் சாப்பிடாததைப் பற்றி அக்கறைப்பட்டான். அதேபோல அவளும் தன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று குழந்தைத்தனமாக ஆசைப்பட்டான். காலையில் வேலைக்குப் போவதன் முன் ஒரு தடவை வந்து பார்த்துவிட்டு நேரமானால் அழைத்துக்கொண்டு போய் விட வேறு செய்தான். ஒரு நாளில் மூன்று தடவையாவது தொலைபேசியில் அழைத்தான். இரவில் ‘இன்னும் நீ தூங்கவில்லையா…?’என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான்.
“ஏன் இப்பிடி நடந்துக்கறே…?”பொறுக்கமாட்டாமல் ஒருநாள் கேட்டுவிட்டாள்.
“எப்பிடி…?”
“அவங்கல்லாம் சொல்றதை நெசமாக்கறது மாதிரி”
“நீயும் நானும் ஒழுங்காத்தான இருக்கோம்”
“அத அவங்களயெல்லாம் ஒவ்வொருத்தரா கூப்ட்டு கூப்ட்டு சொல்லிட்டிருக்கமுடியுமா?”
“ஒம் பேர் கெட்டுப் போய்டும்னுதான இப்டிப் பேசற”
“இனும கெட என்ன இருக்கு”அவள் தணிந்த குரலில் சொன்னாள்.
அன்று மாலைவரை அவன் அழைக்காதது அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஏழு மணி அவனைக் காணாது கடந்தது. அருந்ததிக்கு அவன் வராதது ஏதோ ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது. ஆனாலும், ஏதோவொரு எதிர்பார்ப்பில் நெடுநேரமாக வாசல் இருளை வெறித்துப்பார்த்துக்கொண்டு திண்ணையில் இருந்தாள். கதவைப் பூட்டப்போக இருளுக்குள் ஓருருவம் நின்றிருப்பது தெரிந்தது. ஒருகணம் யாரோ என்று நினைத்துக் கத்தப்போனாள். ‘நான்தான்’என்ற அவனது குரல் கேட்டதும் கோபமாக இருந்தது.
“எதுக்கு பேய் மாதிரி இதுல நின்னுட்டிருக்க… திக்குன்னு ஆகிப் போச்சு ஒரு நிமிசம்”
“எட்டு மணிலேர்ந்து இங்ஙனதான் நின்னுட்டிருக்கேன்.”
“ஒனக்கென்ன பைத்தியமா…?”
“நீ என்னயத் தேடுறியான்னு இங்க நின்னு பாத்துட்டிருந்தேன்”
“ஒன்னோட பழகுறதுக்கே பயமா இருக்கு… நீயேன் இப்டி விசித்திரமான நடந்துக்கறே…”
“எனக்கு ஒங்கூடவே இருக்கணும்”
தலையைக் குனிந்தபடி சொன்னான்.
“அப்டின்னா… நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாங்கிறியா…? இல்ல என்னய வைப்பாட்டியா வைச்சிருக்கப் போறேன்னு சொல்றியா…?”
“ரெண்டுமில்ல. எனக்கு ஒங்கூட ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கணும் அவ்ளவுதான்”
அவளுக்கு எழுந்து உள்ளே போய்விடலாமா என்றிருந்தது. ஆழமறியாமல் ஒரு பைத்தியத்திடம் மாட்டிவிட்டோமோ என்றுகூடத் தோன்றியது.
“எனக்கு ஊர்ல பொண்ணு பாக்கறாங்க”என்றான்.
“கட்டிக்கயேன்… எனக்கும் நிம்மதியா இருக்கும்”
“எனக்கெதுக்கு கல்யாணமெல்லாம்… வாழ்நாள் பூரா ஒம் பக்கத்துலயே இருந்துட்டு செத்துப் போயிடறனே…”
அவள் எழுந்து நின்றாள்.
“எனக்கு கேக்க ஒருத்தரும் இல்லேன்னுதான இப்டி வந்திருந்து அழிச்சாட்டியம் பண்றே… எம் மேல ஆசைப்படுறியான்னா இல்லன்னு சொல்றே… ஆனா பக்கத்துலயே இருக்கணுங்றே… கண்டதையும் படிச்சுட்டு பைத்தியக்காரத்தனமா ஒளர்ற மாதிரியிருக்கு”
“சத்தியமா அருந்ததி அதான் உண்மை… எனக்கு ஒன் கூடப் படுத்துக்கணும்னெல்லாம் ஆசை கெடயாது. ஒம் மடியில படுத்துக்கணும். நீ எனக்குத் தாயா இருந்தாப் போதும்…! சிநேகிதியா இரு போதும். நான் ஒனக்குக் காவலா இருக்கேன்”
“நாய் மாதிரியா…?”
அவன் சடாரென்று எழுந்து மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கிப் போனான்.
பின்னால் போய் அழைக்கலாமா என்று தோன்றியது. பிறகு, போகட்டும் என்று விட்டுவிட்டாள்.
எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு ஓடிப்போய்விட்ட புருசன்காரனை நினைக்க ஆத்திரமாக இருந்தது. ஒற்றைப்பெண்ணாகப் பெற்றுப்போட்டுவிட்டு யாரோ அவசரப்பட்டு அழைத்ததுபோல செத்துப்போய்விட்ட தாய்தந்தையை, தனிமையை, இல்லாமையை, அந்த வேலையை விடமுடியாதிருப்பதை எல்லாவற்றையும் நினைக்க தலையை விரித்துப் போட்டுக்கொண்டு இருந்து அழலாம் போலிருந்தது.
மறுமுறை அவனைப் பார்த்தபோது கடையின் முன்னால் நின்று யாருடனோ தர்க்கப்பட்டுக்கொண்டிருந்தான். புதியவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. இவளைக் கண்டதும் அவன் ‘நாம அப்புறமாப் பேசலாம்’என்று சொல்லிவிட்டுப் போனான். போகும்போது அருந்ததியை ‘நான் ஒன்னைப் பாக்கறேன் பார்’என்பதுபோல மேலிருந்து கீழ் பார்த்துவிட்டுப் போனான்.
“எங்க வந்தே…?”
“நான் ஒன்னயப் பாக்க வரல. அப்பாவைப் பாத்துப் பணம் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்”
அவன் முகத்தைத் திருப்பி எங்கோ பார்த்துக்கொண்டு பேசினாலும் சாராய நெடியடித்தது.
“குடிச்சிருக்கியா…?”
“ஏன் குடிச்சாத் தப்பா…?”
“குடியை வுட்டுட்டேன்னு அன்னிக்குச் சொன்னே..”
“சரி இனுமக் குடிக்கல”
அவன் கீழ்ப்படிவுள்ள குழந்தையைப் போல சொன்னான். அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“சரி நா போறேன்”
“நேரம் கிடைக்கறப்ப நீ எனக்கு போன் பண்றியா…?”
“எதுக்கு…?”
“பேசணும்”
கடைக்குள் போனதும்தான் முதலாளி உள்ளே இருந்துகொண்டு அவனுக்கு இல்லை என்று சொல்லியனுப்பியிருந்தது தெரியவந்தது.
“என்னவாம் அந்த நாயி…?”
மகனைப் பற்றி அவளிடம் பேசும் முதல் வார்த்தை இவ்விதம் அமைந்துவிட்டதே என்பது குறித்து உள்ளுக்குள் வருத்தம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இருவரைப் பற்றியும் கடையில் பேசுவது அவர் காதுவரை நிச்சயம் போயிருக்கும். அது கண்களில் தெரிந்தது. அவரிடம் சட்டெனப் பொய் சொல்ல வரவில்லை.
“போன் பண்ணச் சொன்னார்”
“நீ அவங்கிட்ட ஒண்ணும் வச்சுக்காத… வம்பு பிடிச்ச பய”தந்தையே தன் மகனைப் பற்றி இப்படிச் சொல்வது ஒருமாதிரியாகத்தானிருந்தது.
“ஏன் இப்டி…?”மெதுவாகக் கேட்டாள்.
“ஊர்ல ஒரு பொண்ண லவ் பண்ணான். அவ வேற யாரோடவோ ஓடிப் போய்ட்டாளாம். அதுலேர்ந்து ஒரே குடி. கொடல் வெந்து போச்சு. இங்க கொணாந்து கடையைப் பாத்துக்கடான்னு வுட்டா வாற வருமானம் எல்லாத்தையும் எடுத்து சாராயக்கடையில கொட்டினான். அப்றம்தான் பாத்துட்டுத் தொரத்தி வுட்டுட்டேன். அவென் அம்மா ராத்திரி பகலா அவெனை நெனைச்சு ஒரே அழுகைதான். தெனமும் வந்து காசு கேப்பான். இப்ப ஒன்னோட பழக ஆரம்மிச்சாப்றந்தான் குடி கொஞ்சம் கொறஞ்சிருக்கு”
அவள் கண்களைத் தாழ்த்திக்கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். முதலாளிக்குத் தன்மீது கோபமில்லை அபிமானந்தான் என்பதறிந்து கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“உனக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை…?”குறுஞ்செய்தி அவனிடமிருந்துதான்.
“நீ என்னுடைய மனதில் முள்ளாய் இருக்கிறாய்” அரை மணி நேரம் கழித்து மற்றொரு செய்தி.
“உன் நினைவைக் குடித்து அழிக்கிறேன்”மேலுமொன்று.
“மன்னித்துக்கொள் நான் உன்னைத் தொந்தரவு செய்வதற்கு”
தொடர்ந்து வந்த செய்திகள் அவன் குடித்துக்கொண்டிருக்கிறான் என்பதைக் கூறின. அவள் கைத்தொலைபேசியை அணைத்துவைத்தாள். அவன் மீண்டும் மீண்டும் அவளோடு தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருப்பான் என்பதை அவள் அறிவாள். ஆனாலும் தனக்கு அவன் மீது கோபம் வராதது ஆச்சரியமாக இருந்தது.
“இன்னிக்குப் பாத்தா ஒரேயடியா சொல்லிடணும்… இந்தக் கூத்தெல்லாம் வேணாம். ஊரைப் பாக்கப் போய்ச் சேருன்னு..”நினைத்துக்கொண்டாள். அவனோடு பேசாமலிருப்பது சிரமந்தான். என்றாலும் நாட்களானால் அவனை மறந்துவிடலாம் என்பது அவளுக்குத் தெரியும்.
அவன் நன்றாகத் தூங்கி எழுந்துவிட்டு வந்திருக்க வேண்டும். முகம் தெளிந்திருந்தது. விட்டத்தை வெறித்துக்கொண்டு,தெருவைப் பார்த்துக்கொண்டு,நகத்தைச் சுரண்டியபடி பொழுது வெறுமனே கழிந்துகொண்டிருந்தது. அவன் அவளது விழிகளைப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவள்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
“இந்த நாடகமெல்லாம் எதுக்கு…?”
“ஒருத்தர் மேல அன்பாயிருக்கறதுக்குப் பேர் நாடகமா…?”
“நா யாரோ ஒருத்தி. நாளைக்கு ஒனக்குக் கல்யாணமானாத் தூக்கிப் போட்டுட்டுப் போய்ட்டே இருக்கப்போற…இடைநடுவில ஒனக்குப் பொழுதுபோகணும்ங்றதுக்காக என்னயப் பயன்படுத்திக்காத… நா ஏற்கெனவே நொந்துபோயிருக்கறவ”
அவன் தலையைக் குனிந்துகொண்டான். புறங்கையால் கண்களைத் தேய்த்துக்கொண்டான். நிமிர்ந்தபோது இமையோரம் சிவந்திருந்தது.
“என்னமோ தெரில… எனக்கு ஒன்னயப் புடிச்சிருக்கு. மத்தப் பொண்ணுங்க மாதிரி எல்லாருக்கும் நெளிஞ்சு கொழஞ்சுக்கிட்டு இல்லாம தனிச்சு வாழ்க்கைய சவாலா எடுத்துக்கிட்டிருக்கற ஒன்னோட துணிச்சல் புடிச்சிருக்கு. ஒன்னோட கையப் புடிச்சிக்கிட்டு வாழ்க்கை முழுக்க ஒம்பின்னாடி வந்தா பயமில்லாம இருக்கலாம்னு தோணுது. உண்மையச் சொன்னா என்னைவிட வயசு கொறச்சலானவளா இருந்திருந்தா ஒன்னய கல்யாணம் பண்ணிக்கறதைப் பத்தி யோசிச்சுப் பாத்திருப்பேன்னு இன்னிக்குத் தோணுச்சு. ஆனா இதுக்குப் பேர் காதல் இல்ல. ஒம்மேல எனக்கிருக்கிறது விட்டுவிலக முடியாத மரியாதை மட்டுந்தான். என்னய போடா மயிரேன்னுட்டு ஓடிப்போனவ மேலதான் இன்னும் கிறுக்குப் புடிச்சுக் கெடக்கு…”
அவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது. ஆனால் அவன் வார்த்தைகளில் இருந்த நியாயத்தையும் உண்மையையும் மறுக்க முடியவில்லை.
“இனும என்னயப் பாக்க வராத. அமைதியா தன்பாட்டில ஓடிக்கிட்டிருந்த ஆத்துல எறங்கி அடியில கெடக்கற வண்டலையெல்லாம் கொழப்பி வுட்டுட்டுப் போற பாவத்தைப் பண்ணாத. தனிச்சுப் போயிட்டேன்தான். ஆனா சாக விரும்பலை. தயவுசெஞ்சு நீ போயிடு”
அவள் முழங்காலில் முகம் புதைத்து அழுதாள். எழுந்து அவளைத் தொட்டுத் தேற்ற வேண்டும் போலிருந்தது. எப்போதுமில்லாதபடி அவளை அணைத்துக்கொள்ளத் தோன்றியது. அவளருகில் அமர்ந்து கூந்தலில் முகம் புதைத்துக்கொண்டாலென்ன என்று நினைத்தான். அவள் அழுவதை சில நிமிடங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் படியிறங்கிப் போனான்.
அவன் போனபிறகு அவள் வெகுநேரமாக இருளிலேயே உட்கார்ந்திருந்தாள்.
16:40 Posted in சிறுகதை | Permalink | Comments (0) | Trackbacks (0) | Email this